காதல் திருமணம் செய்த பெண் மர்ம மரணம்.. பெண் வீட்டார் தர்ணா போராட்டம்.. ஈரோட்டில் பரபரப்பு!

 
Erode

கவுந்தப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தங்கள் மகளை அவரது கணவர் வீட்டார் கொலை செய்துள்ளதாக பெண் வீட்டார் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் அடுத்த பூமாண்ட கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பூரணி (29). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த போது ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து உள்ளார். வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்த நிலையில் பூரணியின் வீட்டாரை பார்க்க விடாமல் மதன் வீட்டார் தொடர்ந்து தடுத்து வந்து உள்ளனர். மேலும் சொத்து, பணம் உள்ளிட்டவைகளை தந்தால் மட்டுமே உங்களது மகளை பார்க்க முடியும் என பூரணி வீட்டாரிடம் கூறி விட்டனர். இந்நிலையில் பூரணி கர்ப்பமானார். அப்போதும் அவரைப் பார்க்கவிடாமல் மதன்குமார் வீட்டார் தடுத்து விட்டனர்.பூர்ணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி திடீரென பூரணிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பூரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பூரணி பெற்றோர் மகளை பார்க்க சென்றபோதும் மதன் குமார் குடும்பத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி பார்க்க விடாமல் செய்துவிட்டனர்.

Dead Body

இதனை அடுத்து பூரணி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் பூரணியின் உடல் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரதே பரிசோதனையில் பூரணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 15, 16-ம் தேதிகளில் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான மதன் குமார் குடும்பத்தினர் அதன் பிறகு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு பூரணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென முற்றுகையிற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பூரணி பெற்றோர் கூறும்போது, எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. எனது மகள் சாவில் மதன்குமார் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

Erode

கிட்டத்தட்ட மதன்குமார் குடும்பத்தினர் தலைமறைவாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. போலீசார் அவர்களை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். எஸ். பி. அலுவலகத்தில் திடீரென கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பூரணி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பூரணி உறவினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

From around the web