பள்ளிக்கரணையில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை.. திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவு
பள்ளிக்கரணையில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை விவேகானந்தர் நகர் 13-வது தெருவில் வசித்து வருபவர் பாலசந்தர் (29). இவர் போரூர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (27). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவுப் பணிக்காக சென்ற பாலச்சந்தர் மனைவியை செல்போனில் அழைத்து உள்ளார். அப்போது நீண்ட நேரமாக ராஜலட்சுமி போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மலர்க்கொடி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
இருவரும் வீட்டிற்கு விரைந்து வந்து நீண்ட நேரமாக தட்டியும் ராஜலட்சுமி கதவு திறக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ராஜலட்சுமி மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாமனார், மாமியார் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் ராஜலட்சுமி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 மாதங்களாக ராஜலட்சுமி மன உளைச்சலில் இருந்து வந்ததும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ராஜலட்சுமியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை எதுவும் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.