பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மலம்.. மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!

 
Kanchipuram

காஞ்சிபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களை அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Kanchipuram

இந்த நிலையில், இன்று மதிய உணவு இடைவேளையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு அருந்தத் தயாராகியுள்ளனர். உணவு அருந்துவதற்காக எடுத்துச் சென்ற தட்டுகளைக்  கழுவுவதற்காகக் குடிநீர்த் தொட்டிக்குச் சென்றுள்ளனர். குடிநீர்த் தொட்டியிலிருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. பின்னர் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அங்குச் சென்று பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக மாணவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர்  தொட்டியிலிருந்த குடிநீர் முழுவதையும் வெளியேற்றியுள்ளனர். குடிநீர் முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது.

Police

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மர்ம நபர்களை  தீவிரமாகத்  தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web