சொத்து பிரச்சினையில் பெற்ற மகனை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற தந்தை.. கரூரில் பரபரப்பு

 
Karur

கரூர் அருகே சொத்து பிரச்சினையில் பெற்ற மகனை அடித்துக்கொலை செய்து விட்டு விபத்து என நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் ஜெகதாபி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (43). வேன் டிரைவரான இவருக்கு சுதா (40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பிரியலட்சுமி (17) என்ற மகளும், திவாகரன் (13) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனோகரன் தனது குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சுதா தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மனோகரன் வீட்டிற்கு நேர் எதிரே அவரது தந்தை மாணிக்கம் (71) புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளார். இதனை அறிந்த சுதா எங்கள் வீட்டிற்கு எதிரே ஏன் வீடு கட்டுகிறீர்கள், எனது கணவர் வந்தவுடன் வீடு கட்டும் பணியை தொடங்குங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் குடிபோதையில் வந்து சுதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

murder

இதையடுத்து சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்த மனோகரனிடம், சுதா நடந்ததை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் உடனடியாக தனது தந்தை மாணிக்கத்திடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு புதிதாக கட்டி வரும் வீட்டின் முன்பு மாணிக்கம் படுத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த மனோகரன், இங்கே படுக்கக்கூடாது என்று கூறி அவரை விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரன் மணிராஜ் (30) என்பவரை அங்கு வரவழைத்துள்ளார். அப்போது மாணிக்கம், மணிராஜை, மனோகரன் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

Velliyanai PS

இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம், மணிராஜ் ஆகியோர் சேர்ந்து மனோகரனை கையால் துடிக்க துடிக்க அடித்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மாணிக்கம் தனது நெருங்கிய உறவினர்களை மட்டும் வரவழைத்து தனது மகன் மனோகரன் சாலை விபத்தில் இறந்து விட்டதாக கூறி நம்ப வைத்துள்ளார். அதன்பிறகு மனோகரன் உடலை மாணிக்கம், மணிராஜ் ஆகியோர் சேர்ந்து சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டனர்.

கணவனை அடித்துக்கொலை செய்ததாக, மனோகரனின் மனைவி சுதா வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணிக்கம், மணிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web