போதையில் அடித்து உதைத்த மகன்.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொலை செய்த தாய்.. வந்தவாசியில் அதிர்ச்சி சம்பவம்

 
Vandavasi

வந்தவாசி அருகே மது போதையில் தொல்லை கொடுத்த மகனை, சகோதரி உதவியுடன்  கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, கல்லால் அடித்து தாய் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுரேஷ் அதிகளவில் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருந்த அவரது தாய் ருக்குமணி மற்றும் அவரது பெரியம்மா முனியம்மாளிடம் நேற்று  தகராறில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் இருவரையும் தாக்கியுள்ளார். தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு இருவரிடமும் சண்டை போட்டுள்ளார்.

Oil

குடிகாரனாக உனக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள் என்று இருவரும் கூறியுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும், பதிலுக்கு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த  எண்ணெயை எடுத்து  சுரேஷின் தலையில் ஊற்றியுள்ளனர். 

இதனால் துடிதுடித்து  கீழே விழுந்து அலறிய சுரேஷை அருகே இருந்த கல்லைக் கொண்டு தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.  இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்தவாசி போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Vandavasi South PS

இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சுரேஷின் தாய் ருக்குமணி மற்றும் பெரியம்மா முனியம்மாள்  ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web