பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்.. 12-ம் வகுப்பு மாணவருக்கு கத்தி வெட்டு..!
பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பிய 12-ம் வகுப்பு மாணவனை வழிமறித்து மற்றொரு மாணவன் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்து உள்ள காவி தண்டலம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 17 வயது மூத்த மகன் சாலவாக்கம் அடுத்த ஒரக்காடு பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் காவி தண்டலம் பகுதியில் இருந்து பள்ளிக்கு தனது சைக்கிளில் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலாண்டு தேர்வின் இறுதித் தேர்வு எழுதி, முடித்துவிட்டு பின்னர் மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வரும் போது பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவனை முகம் மற்றும் தலையில் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த மற்றொரு மாணவனுக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சாலவாக்கம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வெட்டப்பட்ட பள்ளி மாணவனுக்கும், 10-ம் வகுப்பு படித்து வரும் சாத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் 10-ம் வகுப்பு மாணவன் செங்கல்பட்டு அறிஞர் அண்ணா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் தனது அண்ணனை செல்போன் மூலம் அழைத்துள்ளார். அவ்வப்பொழுது பத்தாம் வகுப்பு மாணவனுக்கும் 12-ம் வகுப்பு மாணவனுக்கும் பிரச்சனையும் இருந்து வந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த 10-ம் வகுப்பு மாணவனின் அண்ணன், ரவிச்சந்திரனின் மகனை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்டியது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சாலவாக்கம் போலீசார் 10ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏன் பிரச்சனை ஏற்பட்டது, காதல் விவகாரமா?, கஞ்சா போதையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
