ஆன்லைனில் கடன் பெற்ற இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்.. லோன் ஆப் அட்டூழியம்!!

 
Trichy

திருச்சி அருகே ஆன்லைனில்  கடன் பெற்ற இளம் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலை தளங்களில் வெளியிட்ட நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். கணவரின் வருமானம் குடும்பத்தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. இந்நிலையில் அவசர தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் கேட்டுள்ளார். யாரும் உதவாத நிலையில் நிதிதேவையை எப்படி சமாளிப்பது என்ற யோசனை இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஆன்லைன் ஆஃப் மூலம் கடன் வாங்கலாம் என முடிவு செய்து, செப்டம்பர் 26-ம் தேதி ஆன்லைன் செயலி மூலம் ரூ.7,000 கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து அக்டோபர் 2-ம் தேதி பெற்ற கடனுக்கான தவணை மற்றும் முழுத்தொகையினையும் கூகுள் பே மூலம் திரும்ப செலுத்தியுள்ளார்.

loan-app

இந்நிலையில் ஆன்லைன் செயலி நிறுவனத்தில் பேசுவதாக இவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்துள்ளது. தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்திவிட்டதாக கூறியுள்ளார். அப்படியானால் செலுத்தியதற்கான ரசீதை அனுப்புங்கள் என மறுமுனையில் இருந்து கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு கூகுள் பே-வில் செலுத்தியதற்கான ரசீதை அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் வந்துள்ளது. அதில் அந்தப்பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்திரித்து அனுப்பியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக அந்த எண்ணிற்கு அழைத்தபோது கடன்வாங்கிய முழு தொகையையும் செலுத்தவில்லை என்றால் இந்த படத்தை உனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பி உன் மானத்தை வாங்கிவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.

Police

இதன்காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான பெண் இதுதொடர்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்லைனில் பெற்ற கடனை செலுத்தியபோது பணம் கேட்டு இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web