ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் சூடு!! நிர்வாகம் மீது தாய் போலீசில் புகார்

 
school

சென்னையில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு தனியார் பள்ளி நிர்வாகம் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி தாமோதரன் 1-வது தெருவை சேர்ந்தவர் கலைசெல்வன் என்பவரது மகள் திவ்யா (27). கணவரை இழந்த இவர் பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் மனவளர்ச்சி குன்றிய மகள் உள்ளார்.  இவரது மகள் பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள கல்கி ரங்கநாதன் மான்போர்ட் ஸ்பெஷல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்த நிலையில் திவ்யாவின் தந்தை நேற்று முன்தினம் காலை சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு, பின்னர் மதியம் சிறுமியை அழைக்க சென்றார். அப்போது, சிறுமிக்கு கை, கால்களில் காயம் இருக்கிறது, ஏன் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என ஆசிரியர் ஒருவர் கலைசெல்வனிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கலைசெல்வன் காலையில் குழந்தை பள்ளிக்கு வரும் போது நன்றாக இருந்ததாகவும், பள்ளியில்தான் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து கலைசெல்வன் தனது மகள் திவ்யாவிற்கு தெரிவித்துள்ளார். இதை கேட்டு பதறிய திவ்யா, பள்ளி ஆசிரியர்களிடம் தனது மகளுக்கு நடந்த கொடுமையை குறித்து கேட்டுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் முறையான பதில் கூறாததால் ஆத்திரமடைந்த திவ்யா, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து திவ்யாவின் தந்தை  கூறுகையில், "குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் அங்கேயே பாதுகாப்பில்லை. தனது குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்தியதால், யாரை கண்டாலும் அஞ்சி நடுங்குகிறது. எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கூறினார்.

From around the web