பிறந்த 50 நாட்களே ஆன பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை... வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

 
Gingee Gingee

செஞ்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்எடையாளம் ஊராட்சிக்குட்பட்ட கடக்கால்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் லாலுபாஷா. இவரது மனைவி ஜன்மா. இவர்களது மகள் பிர்தோஸ் (21). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவரின் மகன் அப்துல்லா (25) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் 50 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய தாய் வீடான கடக்கால்தோப்பு கிராமத்தில் பிர்தோஸ் தங்கி வந்துள்ளார். இதனிடையே நேற்று காலை குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பழமையான விவசாய கிணற்றில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை ஹயானா சடலமாக மிதப்பதைக் கண்ட கிராம பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Dead-body

மேலும் அவருடைய தாய் பிர்தோஸ் எங்கு தேடியும் காணாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கும், செஞ்சி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு தாய் பிர்தோஸ் சடலத்தை கிணற்றிலிருந்து  மீட்டனர்.

இதுகுறித்து செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Gingee

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் பிறந்து 50 நாட்களே ஆன தன்னுடைய பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வேற ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட பிர்தோஸ் தாய் ஜன்மா செஞ்சி காவல் நிலையத்தில் வரதட்சணை பிரச்சனை என புகார் அளித்தார்.

இதனையடுத்து செஞ்சி போலீசார் அப்துல்லா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வரதட்சணை பிரச்சனையில் திருமணமான ஒரு வருடத்துக்குள்ளாகவே இளம் பெண் பிறந்து 50 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web