கடலூர் அருகே ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் விசாரணை!

கடலூர் அருகே ஓட்டுநர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்து உள்ள பெரியாக்குறிச்சி ஜி.பி. நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சத்தியநாராயணன் (20). ஓட்டுநரான இவரும், அவரது தாயார் தனலட்சுமியும் அதே பகுதியில் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தியநாராயணன் வசித்து வந்த வீட்டின் கதவு நேற்று மதியம் வரை திறக்கப்படவில்லை.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தாய் தனலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தனலட்சுமி அங்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் உள்ள அறையின் கம்பியில் சத்தியநாராயணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த தனலட்சுமி கதறி அழுதார். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மந்தாரக்குப்பம் போலீசார், சத்தியநாராயணனின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து சத்தியநாராயணனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியநாராயணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.