பீர் பாட்டிலால் 3 வயது குழந்தை அடித்துக் கொலை.. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்!!
![Hosur](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/9af0a873de8d0de50161323eced4b340.jpg)
ஓசூரில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தாயின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் வசித்து வருபவர் நந்தினி (25). இவருக்கு சக்தி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சக்தி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நந்தினிக்கு ரஞ்சித் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரஞ்சித் உடன் அலூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். மூத்த மகனை வெளியூரில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்துள்ளார். 3 வயதான இளைய மகனை தன்னுடன் வைத்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரஞ்சித் - நந்தினி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது 3 வயது குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் குழந்தை என்று கூட பாராமல் பீர் பாட்டிலால் குழந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை வலியால் அலறி துடித்துள்ளான். இதனையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து டிசம்பர் 22-ம் தேதி குழந்தையை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். 25-ம் தேதி குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தையும் இறந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையின் உடல் ஒசூர் கோகுல் நகர் சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.
இந்த நிலையில் நந்தினியிடம் குழந்தை இல்லாதது குறித்து அவரது தாய் வள்ளி கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இந்த விவரம் ரஞ்சித் காதுகளுக்கு எட்டியுள்ளது. ரஞ்சித் வள்ளியை அழைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தினியின் தாய் உடனடியாக குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓசூர் ஹட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்த ரஞ்சித்தை கைது செய்தனர். நேற்று ஹட்கோ போலீசார் ஓசூர் கோகுல் நகர் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்து மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.