செங்கல் சூளையில் வேலை பார்த்த 17 வயது சிறுவனுடன் மாயமான 33 வயது பெண்... தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்!
![Virudhunagar](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/aac569536203833e15c25bd9bba53a4e.jpg)
ராஜபாளையம் அருகே 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த 33 பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது பெண் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். இதே செங்கல்சூளையில் 17 வயது சிறுவனும் வேலைபார்த்து வந்துள்ளான். இந்த நிலையில் சிறுவனுடன் நெருங்கி பழகிய அந்த பெண் ஒரு கட்டத்தில் சிறுவனை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் அடிக்கடி அந்த சிறுவனுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் சிறுவனும் அந்த பெண்ணுடன் நெருங்கி பழக ஆரம்பித்தான். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்தனர். அதன்படி கடந்த 19-ம் தேதி இருவரும் செங்கல்சூளையில் இருந்து மாயமாகினர். இதனால் சந்தேகமடைந்த சக தொழிலாளிகள் மற்றும் இருவரது குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடினர்.
ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி இருவரது உறவினர்களும் இதுகுறித்து சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சேத்தூர் மற்றும் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் இருவரும் கன்னியாகுமரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க கன்னியாகுமரிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அதன்படி அங்கு சென்று இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் இருவரும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து, போலீசார் இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து சேத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் இதுதொடர்பாக 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தில் அந்த பெண்ணை கைது செய்தனர்.