சூர்யாவின் வாடிவாசல் திறப்பது எப்போது?

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ள நிலையில் சூர்யா மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளார். ரெட்ரோ படம் மூலம் சூர்யா மீண்டும் வெற்றிப் பயணத்தைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பு வேகமாக நடந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் வாடி வாசல் படம் குறித்த செய்திகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.
விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்திருந்தார். கலைப்புலி தாணு வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் பொங்கல் திருநாளன்று அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது என்று அறிவித்தார்.நேர்காணலில் பேசிய தாணு ஜூலையில் படப்பிடிப்பு தொடங்க் உள்ளதாகவும் அதற்கு முன்னதாக பிரம்மாண்டமான வகையில் தொடக்க விழா நடத்தி வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.