தொழிலதிபரை மணக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.. வைரலாகும் புகைப்படங்கள்!

 
Varalaxmi

நடிகை வரலட்சுமி சரத்குமார் - மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது.

Varalaxmi

அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா, மாரி-2, கன்னிராசி, பாம்பன், நீயா-2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர், மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை மணமுடிக்க உள்ளார். அவர்கள் இருவருக்கும் மும்பையில் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வரலட்சுமி சரத்குமார் - நிகோலய் சச்தேவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து, மார்ச் 1 மும்பையில் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிகொண்டு நிச்சயம் செய்யப்பட்டது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து நடிகை வரலட்சுமிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web