கலைஞர் தொலைக்காட்சியில் எஸ்.வி.சேகர்! திமுக பிரச்சாரத்திற்குப் போவாரா?

பிரபல காமெடி நடிகரும் மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆன எஸ்.வி.சேகர் கல்யாண கோலத்தில் தோன்றும் புகைப்படம் ஒன்று சமூகத்தளத்தில் வைரலானது. திடீர்ன்னு இன்னொரு திருமணம் செய்து விட்டாரா என்ற சந்தேகம் எழுந்த போது, கூட இருக்கும் பெண்ணின் கையில் இருக்கும் அரிவாள் தான் இது ஏதோ ஷூட்டிங் படம் என்று தெரியப்படுத்தியது.
கலைஞர் தொலைக்காட்சியில் எஸ்.வி.சேகர் - ஷோபனா நடிக்கும் மீனாட்சி சுந்தரம் புதிய மெகாத் தொடரின் படப்பிடிப்பு காட்சி தான் அது. வரும் திங்கட்கிழமை முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. எஸ்.வி.சேகர் ஏன் திடிரென்று கலைஞர் தொலைக்காட்சியின் பிரைம் டைம் தொடரில் நடிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மைக் காலத்தில் முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்த எஸ்.வி.சேகர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டியும் வந்துள்ளார். அவருடைய நாடக விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். எஸ்.வி.சேகரின் தந்தை பெயர் அவர் வசித்த தெருவுக்கு சூட்டப்பட்டது. தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேர்வதாக இல்லை. ஆனால் முதலமைச்சருக்காக திமுக மேடையில் பிரச்சாரம் செய்யத் தயார் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
எல்லோருக்குமான அரசு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறிவரும் நிலையில் 2026ம் ஆண்டு தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற முயற்சிகளை முன்னெடுத்துள்ளார் முதலமைச்சர். அந்த வகையில் எஸ்.வி.சேகரின் பிரச்சாரம் அவர் சார்ந்த சமூகத்தினரிடம் திமுகவுக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற கணிப்பு உள்ளது. திமுக மேடைகளில் ஏறுவதற்கு முன்னோட்டமாக திமுக தொலைக்காட்சியில் தோன்றுகிறார் எஸ்.வி.சேகர் என்றே தெரிகிறது