புதிய அவதாரம் எடுத்த சமந்தா.. தண்ணீரில் ஆட்டம் போடும் புகைப்படம் வைரல்
![Samantha](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/1bf756680cf994da06845c717fc1d2fc.webp)
நோய் தாக்கத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சமந்தா படங்களில் நடிக்க இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்லறீயா மாமா’ பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இவர் மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக அவருக்கு உடல்நலம் தேறி வந்த நிலையில், மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின.
இதனை தொடர்ந்து, மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மயோசிடிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். இதன் மூலம், மயோசிடிஸ் நோய் குறித்து நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என்று மயோசிடிஸ் இந்தியா தெரிவித்திருந்தது. தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ள சமந்தா, மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். மேலும் புதிய படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.
சமந்தா மீண்டும் முன்புபோல படங்களில் தீவிரமாக நடிக்க உள்ளதாகவும், அதற்கு முன்னோட்டமாக மனதை அமைதிப்படுத்தும் முயற்சியாக மலேசியாவில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நோய் தாக்கத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சமந்தா படங்களில் நடிக்க இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.