பிரபல சீரியல் நடிகர் ‘அடடே’ மனோகர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!
பழம்பெரும் நாடக, டிவி நடிகர் ‘அடடே’ மனோகர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.
சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றிக் கொண்டே, நாடகங்கள், டிவி சீரியல்களில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து 3,500-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
ஏராளமான டிவி, ரேடியோ நாடகங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள அடடே மனோகர். சில நாடகங்களை அவரே எழுதி இயக்கியுள்ளார். சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எஸ்வி சேகர், கிரேசி மோகன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள அடடே மனோகர், பெரும்பாலும் நகைச்சுவை கேரக்டர்களிலேயே அதிகமாக நடித்துள்ளார்.
சின்னத்திரையில் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, பிரேமி, ரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள், உள்ளிட்ட 15 சீரியல்களில் இவர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார். மேடையிலேயே பாடி நடிப்பது இவரது தனிச்சிறப்பாக இருந்தது.
அடடே மனோகர் என்ற பெயரில் டிடியில் கடந்த 1986 மற்றும் 1993ம் ஆண்டுகளில் நாடகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து அடடே மனோகர் நடித்துள்ளார்.
இந்நிலையில் அடடே மனோகர் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு சென்னையில் காலமானார். சென்னை குமரன் சாவடியில் வசித்து வந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.