மாத்திரைகள் தான் உணவு.. உடல்நிலை குறித்து நடிகை சமந்தா உருக்கம்!

பல நேரங்களில் மாத்திரைகள் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா அரியவகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இதனால் தன்னால் படுக்கையில் இருந்து கூட ஒரு சில நாட்கள் எழ முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு கடுயைமான வலியை அனுபவித்து வருவதாகவும் உருக்கமாக கூறியிருந்தார். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
சிகிச்சையால் பலவிதமாக பாதிக்கப்பட்டு வரும் சமந்தாவின் சகுந்தலம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதன் ப்ரமோஷன் செய்திகளுக்காக பேட்டி அளித்த போது தான் சமந்தாவுக்கு நோய் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பது தெரியவந்தது. நோய்க்கான சிகிச்சை ஒரு பக்கம், உடற்பயிற்சி, திரைப்படங்கள் என்று இப்பொழுதும் பிசியாகவே இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது சிட்டாடல் சீரிஸ்-இன் இந்தியன் வெர்ஷனில் ஒரு ஸ்பையாக நடிப்பதற்காக தயாராகிக்கொண்டு வருகிறார்.
இதனிடையே செர்பியாவில் உள்ள பழமையான சர்ச் ஒன்றுக்கு சென்ற சமந்தா அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒரு உருக்கமான பதிவையும் எழுதியுள்ளார்.
அதில், மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் அவதிப்பட்ட வந்த நான் கடந்த ஒரு வருடம் எனது வாழ்க்கையே பெரிய போராட்டக்களமாக மாறியது. என் உடம்புக்குள்ளே பல போராட்டங்கள் நடைபெற்றன. சர்க்கரை, உப்பு மற்றும் பருப்பு வகைகள் கூட உட்கொள்ள முடியாத சூழ்நிலை, மாத்திரைகள் மட்டுமே உணவாக பல நேரங்களில் என்னை பாடாய் படுத்தியது.
என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன் என்றும் சொல்லலாம். அதே நேரத்தில் தொழில் முறையில் சில தோல்விகள் என்னை மிகப்பெரிய அளவில் பாதித்தது. ஓராண்டு கால பிரார்த்தனை, பூஜைகள், எந்தவொரு பரிசையும் எதிர்பார்த்து கடவுளை பிரார்த்திக்கவில்லை. மன வலிமைக்காகவும் அமைதிக்காகவும் தான் எனது பிரார்த்தனைகள் இருந்தன. சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியமில்லை. முன்னோக்கி நகர்வதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன்.
எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை கற்றுக் கொடுத்த ஆண்டுதான் கடந்த ஆண்டு. நாம் ஒரு சிலவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மீதி உள்ளவற்றை விட்டு விட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஆண்டு என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.