மடியில் மகனை படுக்க வைத்து தாலாட்டும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ!

நடிகை நயன்தாரா தனது மகனை மடியில் படுக்க வைத்து தாலாட்டி தூங்க வைத்ததை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கினர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக அறிவித்தனர். உயிர், உலக் இருவருக்கும் தற்போது 1 வயது ஆகிறது. அண்மையில் தான் இருவரது முதல் பிறந்தநாளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி கோலாகலமாக கொண்டாடியது.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வந்தாலும், தன் மகன்களுடன் நேரத்தை செலவிட தவறுவதில்லை. தற்போது நடிகை நயன்தாரா, மண்ணாங்கட்டி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யூடியூப்பர் டியூடு விக்கி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நயன்தாரா உடன் யோகிபாபுவும் நடிக்கிறார்.
இதுதவிர இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் நயன். ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் நயனுக்கு பாலிவுட்டிலும் மவுசு அதிகரித்து உள்ளதாம். இதனால் பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, தன் மகனை தாலாட்டி உறங்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Chilling Uyir 🫶🏻 💆🏻♂️ #relax pic.twitter.com/y72VL3386Y
— Nayanthara✨ (@NayantharaU) October 19, 2023
அந்த வீடியோவில், நீச்சல் குளம் அருகே இருக்கையில் கால் நீட்டி அமர்ந்துள்ள நயன்தாரா, தன்னுடைய மகன் உயிரை மடியில் படுக்க வைத்து, அவரை தாலாட்டி தூங்க வைக்கிறார். இதனை வீடியோ எடுத்துள்ள விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின் எமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.