‘கடைசி விவசாயி’ படத்திற்கு தேசிய விருது.. நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் மணிகண்டன்!

 
Manikandan

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் இயக்குநர் ம.மணிகண்டன் நன்றி கடிதம் எழுதியுள்ளார்.

69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான ‘கடைசி விவசாயி’ படம் தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு தேர்வாகி இருக்கிறது. இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடைசி விவசாயி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் 85 வயது விவசாயியாக நல்லாண்டி நடித்திருந்தார். அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு, முனீஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Kadaisi vivasayi

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் மணிகண்டன் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசி விவசாயி படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்காதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகபெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த Vijaysethupathi Production மற்றும் 7cs Entertaiments நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த மக்கள் செல்வன் திரு.விஜய் சேதுபதி அவர்களுக்கும், சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Kadaisi vivasayi

தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69 வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

From around the web