மகளுடன் நானும் இறந்து விட்டேன்.. நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமான கடிதம்!
மகளுடன் நானும் இறந்து விட்டேன் என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
2005-ல் வெளியான ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான அவன் இல்லை, பந்தயம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2012-ல் வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா மற்றும் லாரா ஆகிய இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மன அழுத்தத்தால் மீரா பாதிக்கப்பட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகளின் மறைவுக்கு பின்னர் மிகவும் சோகமாக இருந்த விஜய் ஆன்டனி தற்போது கடிதம் ஒன்றை எழுதி மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.
— vijayantony (@vijayantony) September 21, 2023
அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கிவைப்பாள். உங்கள் விஜய் ஆண்டனி.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.