மன்னிப்பு கேட்க முடியாது.. நடிகை குஷ்பு அதிர்ச்சி பேட்டி!

 
Kushbhu

‘சேரி மொழி’ என்ற வார்த்தை சர்ச்சையாகி வரும் நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து பேசியது சூறாவளியை கிளப்பியது. இந்த பேச்சிற்காக மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார். த்ரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார். த்ரிஷா மன்னித்தாலும் போலீசார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க த்ரிஷா விவகாரத்தில், மன்சூர் அலிகானை கண்டித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு ‘சேரி லாங்கேஷ்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.

திரிஷா - மன்சூர் அலிகான் விவகாரம் ஒருபுறம் தீப்பற்றி எரிய, சேரி மொழி என குஷ்பு கூறியது மற்றொருபுறம் கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. குஷ்பு மீது நடவடிக்கை கோரி விசிக தரைப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ‘சேரி மொழி’ என்ற வார்த்தை சர்ச்சையாகி வரும் நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Mansoor Alikhan

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பது போலதான். அதற்கான விளக்கத்தையும் நான் தெளிவாக கொடுத்துள்ளேன். ‘சேரி’ என்ற வார்த்தை அரசு ஆவணங்களில் இருக்கிறது. வேளச்சேரி, செம்மஞ்சேரின்னு எல்லாம் இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்?

இதற்கு மட்டும் போராட்டம் நடத்துவோம் என கூறும் காங்கிரஸ்காரங்க, ஒரு பெண்ணான என்னை எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசும் திமுகவினரை கண்டித்து ஏன் போராட்டம் பண்ணல? நான் சந்திக்காத வழக்குகள் கிடையாது. விசாரணைக்கு அழைக்கட்டும் நிச்சயம் போவேன். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசவில்லை. எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசினேன்.

Kushbhu

இந்தியாவின் குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்ற போது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விமர்சனம் செய்தவர்கள் தான் இந்த காங்கிரஸார். நேருவுக்கும், இந்திராகாந்திக்கும் பாரத் ரத்னா வாங்கி கொடுத்தவர்களுக்கு அம்பேத்கருக்கு ஏன் கொடுக்க முடியவில்லை.

த்ரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்தோம். அதேபோல ரோஜா விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் வந்தது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் உங்கள் கைகளுக்கு வந்த பிறகு தான் எங்களுக்கே அந்த வீடியோ வந்தது. அதன்பின் நடவடிக்கை எடுத்தோம். என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது போலீசாருக்கு நன்கு தெரியும்” என்றார்.

From around the web