வைரலாகும் போலி வீடியோ.. தொழில்நுட்பத்தை பார்த்தால் பயமாக உள்ளது.. ராஷ்மிகா வேதனை!

 
Rashmika Mandanna

தன்னை வைத்து இணையத்தில் வைராலகி வரும் டீப் ஃபேக் வீடியோ விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2016-ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகுந்த பிரபலமடைந்தார். 2021-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ படத்திலும் நடித்துள்ளார். 

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘சீதாராமம்’ படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவரது நடிப்பில் அனிமல் என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.

Rashmika Mandanna

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த பதிவை நான் வேதனையுடன் பகிர்கிறேன். இணையத்தில் வேகமாக பரப்பப்படும் 'டீப் பேக்' முறையில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ பற்றி பேச வேண்டும். தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது. 


இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும், எனக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். நான் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்திருந்தால் அதனை நான் எப்படி சமாளித்துருப்பேன் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இதுபோல் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதை நாம் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web