லைக்கா புரொடக்‌ஷன்ஸ்க்கு எண்ட் கார்டா? அடுத்து என்ன திட்டம் தெரியுமா?

 
Lyca

தமிழ் சினிமா உலகில் மிகப்பெரும் நிறுவனமாக இருந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முதல் அடுத்தடுத்து பெரிய நிறுவனங்களாக இருந்த விஜயா வாஹினி, சத்யா மூவிஸ், ஏவிஎம் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் எல்லாமுமே படத்தயாரிப்பை நிறுத்தி விட்டன. இவை அனைத்தும் சொந்தமாக ஸ்டூடியோக்கள் வைத்திருந்தவை ஆகும்.

தற்போதைய சூழலில் கலைப்புலி தாணுவின் நிறுவனம், சன் பிக்சர்ஸ், லைக்கா புரொடக்‌ஷன்ஸ் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றன.  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெரும்பாலும் வினியோகம் மட்டுமே செய்து வருகிறது.2014ம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தது லைக்கா.

பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வருகிறது. வேட்டையன், இந்தியன் 2, விடா முயற்சி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவியதால் லைக்கா நிறுவனம் படத்தயாரிப்பை நிறுத்தி வைக்கப்போவதாக செய்திகள் வந்தது.

விஜய் படத்துடன் தொடங்கிய  நிறுவனம் விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்துடன் தன் தயாரிப்புகளை நிறுத்தி விடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மகாவீர் ஜெயின் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட லைக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் பெரிய பட்ஜெட் படங்களை தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது

From around the web