‘என் உயிர் தோழன்’ பட நடிகர் பாபு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

 
babu

‘என் உயிர் தோழன்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் பாபு உடல்நலக் குறைவால் காலமானார்.

1990-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘என் உயிர் தோழன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாபு. அந்த படத்தில் அவர், குடிசை வாழ் கட்சி ஊழியரின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. கிராமத்துக் கதைகளுக்கு ஏற்ற நாயகன் என்ற புகழப்பட்ட இவர், 1991-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பெரும்புள்ளி’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு பூமாலை தான்’ பாடல் அப்போது எங்கெங்கும் ஒலித்தது. ‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ படத்துக்குப் பிறகு முன்னணி நாயகனாக பாபு வலம் வரத்தயாரானார்.

Babu

அப்போது ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் ஒப்பந்தமாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் உயரமான இடத்திலிருந்து நாயகன் பாபு குதிக்க வேண்டும். ‘டூப் போட்டுக்கொள்ளலாம்’ என இயக்குநர் சொல்லியும் கேளாமல் நானே குதிக்கிறேன், தத்ரூபமாக இருக்கும் என கூறிவிட்டு பாபு உண்மையாகவே குதித்தார். அப்போது நிலைதடுமாறி விழுந்து அவருடைய முதுகுப்பகுதியில் பலத்த அடிப்பட்டது.

முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட போதும், அந்தச் சம்பவம் பாபுவை அதன் பிறகு நிமிர்ந்து உட்காரக் கூட முடியாதபடி செய்துவிட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது தயார் கவனித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று நலம் விசாரித்து தேம்பியழுத வீடியோ வெளியானது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபுவின் உடல்நிலை மோசமானதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web