அரசியல் செய்யாதீர்கள்.. நடிகர் விஷாலுக்கு பதிலடி கொடுத்த மேயர் பிரியா!

 
Priya - Vishal

வெள்ள பாதிப்பு உங்களுக்கு மட்டுமில்லை, இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று சென்னை மேயர் பிரியா நடிகர் விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கி உள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. காலை முதல் சென்னையில் பிரதான பகுதிகள் மின்சாரம் இன்றி இருண்டுள்ளது. இது வரை புயலுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து நேற்று இரவு நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், தனது வயதான பெற்றோர் இதனால் பயந்துள்ளதாகவும் தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் 2015-ல் இது போன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இப்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே போன்ற மோசமான நிலை தொடர்வது வருத்தம் அளிக்கிறது எனவும், வரி கட்டும் குடிமகனாக தான் கேள்வி எழுப்புகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். அத்துடன் சென்னை மாநகராடசி மேயர் பிரியா, சென்னை காவல் துறை உள்ளிட்ட பலரையும் அவர் அந்த வீடியோவில் டேக் செய்திருந்தார்.

Vishal

அந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை மேயர் பிரியா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘2015-ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்.

2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. திமுக பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது.

அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம். பல ஆண்டுகளில் வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால்தான் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.


செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதல்வரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கி இருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்’ என்று பதிவிட்டுள்ளார்.

From around the web