கண்ணா லட்டு தின்ன ஆசையா? பவர் ஸ்டார் சீனிவாசனை அலேக்காக தூக்கிய டெல்லி போலீஸ்!
கடன் வாங்கித் தருவதாகக் கூறி 5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி பொருளாதாரத் துறை போலீஸ் மீண்டும் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளது
டெல்லியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த தொழிலதிபர் ஒருவர் நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.1,000 கோடி கடன் பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இது பற்றித் தெரிந்து கொண்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கடன் வாங்கித் தருவதாக அந்த தொழிலதிபரிடம் உறுதி அளித்துள்ளார். கமிஷன் தொகையாக ரூ.10 கோடியை கேட்ட சீனிவாசனுக்கு முதல் கட்டமாக ரூ.5 கோடியை தொழிலதிபர் வழங்கியதாக கூறப்படுகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சீனிவாசன், உறுதி அளித்தபடி கடனை பெற்றுக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மேலும், கமிஷனாக பெற்ற தொகையையும் திரும்ப கொடுக்கவில்லையாம். இதனால், அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இந்த பண மோசடி தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் சீனிவாசன் மீது புகார் செய்தார்
இதையடுத்து டெல்லி பொருளாதரரப் பிரிவு போலீஸார்,சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை 2013-ம் ஆண்டு கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன், 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் ஆஜராகாமல் இருந்துள்ளார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நடிகர் சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
சென்னை வந்த டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், அண்ணாநகர் கிழக்கு 4-வது தெருவில் உள்ள வீட்டில் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சீனிவாசன் மீது சென்னையிலும் இதேபோல் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.
