நீங்க ஓட்டு போடவில்லையா.. கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இல்லை.. பிரகாஷ்ராஜ் பேட்டி

 
Prakashraj

ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் இல்லாமல் போய்விடும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

Election commission

இந்த நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறும்போது, “தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர். ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.


எனது வாக்கு எனது உரிமைக்காக நிற்கிறது. அது என்னைப் பிரதிநிதித்துவம் செய்பவரை, நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் குரல் ஒலிப்பது என்பதை தேர்ந்தெடுப்பதற்கான எனது அதிகாரம். நீங்கள் நம்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன். முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான அனுபவம்” என்று கூறினார்.

From around the web