பரஸ்பர விவாகரத்து கோரி விண்ணப்பித்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!
![Dhanush - Aishwarya](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/be7fc515eaa8cc95f6c590bd417f1b3e.webp)
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2002-ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் 2004-ம் ஆண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், 2022-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.
இது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரின் பிரிவு முடிவு குறித்து ரஜினிகாந்த் இதுவரை கருத்து எதுவுமே தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறார்.
தனுஷூடனான பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா தனது கவனத்தை மாற்ற முயற்சி செய்து பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ஐஸ்வர்யா, லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அதே, போல தனுஷூம் அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே கிடைக்கும் நேரத்தில் தனது இரு மகன்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிய போவதாகவும், இருவரும் நீதிமன்றத்தில்ஃ விவாகரத்திற்கு விண்ணப்பித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. அது வெறும் வதந்தி என சொல்லப்பட்டு வந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை கேள்விட்ட ரசிகர்கள் 18 வருட வாழ்க்கை வீணா போச்சே என இணையத்தில் புலம்பி வருகின்றனர்.