மேடையில் எல்லை மீறிய கூல் சுரேஷ்.. மன்னிப்பு கேட்க வைத்த மன்சூர் அலிகான்!

சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் செய்த செயல் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘சாக்லேட்’ படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் கூல் சுரேஷ். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பல படங்களில் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கிய இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் செல்ல தொடங்கியது. தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். சமீப காலமாக அணைத்து ஹீரோக்களின் படங்களை வித்யாசமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் மன்சூர் அலிகான் பட விழாவில் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் எல்லை மீறி இருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மன்சூர் அலிகான் தயாரித்து, நடிக்கும் படம் ‘சரக்கு’. இப்படத்தை ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ். டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுத, எஸ்.தேவராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, பழ.கருப்பையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (செப். 19) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். மேடையில் பேச வந்த நடிகர் கூல் சுரேஷ். தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை திடீரென தனக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பெண் தொகுப்பாளரின் கழுத்தில் அவரது அனுமதியின்றி போட்டார். இதனால் எரிச்சலடைந்த அந்த தொகுப்பாளர் மேடையிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
Cool Suresh needs to be banned from being invited to events. The nuisance is alarming. He just said he is doing this for 'content' - so stupid! pic.twitter.com/XVocSoWLwF
— Siddarth Srinivas (@sidhuwrites) September 20, 2023
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கீழே அமர்ந்திருந்த நிருபர்கள் சிலர், கூல் சுரேஷின் செயலை கண்டித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து கூல் சுரேஷை அழைத்த நடிகர் மன்சூர் அலிகான் அவரை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கச் செய்தார். அதன்பிறகே நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வரும் கூல் சுரேஷை சினிமா தொடர்பான பொது நிகழ்ச்சிகளில் அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.