வெறுப்பை தவிர்த்து அன்பை தேர்ந்தெடுங்கள்.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி!

 
Karthi - ARR

நடந்த குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எந்த வகையிலும் பொறுப்பல்ல, அவரை வெறுக்க வேண்டாம் என்று நடிகர் கார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் (செப் 10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

ARR

இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. ரசிகர்கள் பலர் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்கேம் என்று சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நமது அன்புக்குரியவராக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்து வருகிறார். இசை நிகழ்ச்சியின் போது நடந்தது தற்செயலானது என்றும், இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் பாதிக்கப்பட்டிருப்பார் என்றும் கூறியுள்ளார்.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் தனது குடும்பமும் அந்த நிகழ்ச்சியில் இருந்ததாகக் கூறியுள்ள கார்த்தி, ஆனாலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக தான் நிற்பதாக தெரிவித்துள்ளார். நம் அனைவர் மீதும் ஏ.ஆர்.ரஹ்மான் அன்பு செலுத்துவது போன்று ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து அன்பை தேர்ந்தெடுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

From around the web