ஷூட்டிங்கில் காயமடைந்த அமிதாப் பச்சன்.. விலா எலும்பில் முறிவு.. படப்பிடிப்பு நிறுத்தம்!

 
Amitabh Bachchan

ஐதராபாத்தில் நடந்த பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் ‘ப்ரோஜெக்ட் கே’ படப்பிடிப்பில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு ஆக்சன் படமான ‘சாஹோ’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில், இயக்குநர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘ராதே ஷ்யாம்’ படத்திலும் நடித்திருந்தார். 

ராதே ஷ்யாம் படத்தை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, ‘ப்ரோஜெக்ட் கே’ படத்தில் நடித்து வருகிறார். தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் ‘ப்ரோஜெக்ட் கே’ படத்தினை வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கிறார். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12=ம் தேதி ‘ப்ரோஜெக்ட் கே’ திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Amitabh Bachchan

 இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இதில் தீபிகா படுகோன், பிரபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், ப்ரோஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பில் காயம் அடைந்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், “ஹைதராபாத்தில் ப்ரோஜெக்ட் கே படப்பிடிப்பில், சண்டைக் காட்சியின் போது, ​​எனக்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பின் குருத்தெலும்பில் முறிவு ஏற்பட்டது மேலும் தசைநார் கிழிந்துள்ளது.  அதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஐத்ராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் சி.டி ஸ்கேன் எடுத்த பிறகு அவர்களை கன்சல்ட் செய்து விமானம் மூலம் வீடு திரும்பினேன். சில நாட்களில் இயல்பு நிலை ஏற்படும். வலிக்கு சில மருந்துகளை பயன்படுத்துகிறேன்.

Amitabh Bachchan

எனவே செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் இடைநிறுத்தப்பட்டு, நான் குணமடையும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. 

நான் ஜல்சாவில் (அமிதாப் பச்சன் வீடு) ஓய்வெடுக்கிறேன் மற்றும் அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு கொஞ்சம் மொபைல் மூலம் தொடர்பில் இருக்கிறேன்.  இன்று மாலை ஜல்சா கேட்டில் உள்ள நலம் விரும்பிகளை என்னால் சந்திக்க முடியாமல் போய்விடும்.. அதனால் வரவேண்டாம்.. வர விரும்புபவர்களுக்கு உங்களால் இந்த தகவலை முடிந்தவரை தெரிவிக்கவும். மற்ற அனைத்தும் நலம்.” என பதிவிட்டுள்ளார்.

From around the web