நடிகை குஷ்பு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.. காயத்ரி ரகுராம் ஆவேசம்!

 
Kusbhu - Gayathri

நடிகை குஷ்பு தனது டிவீட்டை நீக்க வேண்டும் என்றும் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.

லியோ படத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொதுவாக மன்சூர் அலிகான் ஆரம்ப கட்டத்திலிருந்தே வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார். அவருக்கு பெரும்பாலும் பெண்களை பலாத்காரம் செய்வது, கொலை குற்றம் புரிவது, கஞ்சா உள்ளிட்டவற்றை கடத்துதல், சட்டவிரோத விஷயங்களை செய்து அவரை ஹீரோ கண்டுபிடிப்பது போன்ற ரோல்கள் அமையும்.

இந்த நிலையில் லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடித்தார் என எனக்கு தெரிந்தவுடன் அவரை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் குஷ்பு உள்ளிட்டோருடன் அந்த காட்சிகளில் நடித்தது போல் நடித்திருப்பேன் என தெரிவித்தார்.

Mansoor Alikhan

இந்த பேச்சுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா என்ற கேள்வி எழுந்துள்ளது. காமெடி என்ற பெயரில் இப்படி வன்மத்தை கக்குவதா என்றும் விமர்சனங்கள் வந்தன. நடிகை த்ரிஷாவும் இது போல் மனிதத்தன்மை இல்லாத ஒருவருடன் இனி நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறி கண்டித்திருந்தார்.

இந்த நிலையில் தான் பேசியதில் தவறு ஏதும் இல்லை, தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார் மன்சூர் அலிகான். இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்தார். தன் மீது என்ன தவறு உள்ளது என்பதை மன்சூர் அலிகான் பார்க்க வேண்டும் என்றும் அவருடைய ஆணவம், பெண்கள் மீதான வெறுப்பும்தான் வெளிப்பட்டுள்ளது என்று குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

குஷ்புவின் இந்த பதிவுக்கு திமுகவை சேர்ந்த ஷண்முகம் சின்னராஜ் என்பவர், குஷ்பு மற்றும் பாஜகவை தரக்குறைவாக விமர்சித்து பதிலுக்கு டிவிட்டியிருந்தார். அவரது டிவீட்டை பார்த்து கடுப்பான நடிகை குஷ்பு, “இதைத்தான் திமுக குண்டர்கள் செய்கிறார்கள். தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மன்னிக்கவும், உங்கள் சேரி மொழியைப் பேச முடியாது, ஆனால் என்ன பேசினார், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது, உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பதற்காக உங்கள் தலைவருக்கு அவமானம். முதல்வர் ஸ்டாலின் உங்களை அழிக்க முட்டாள்கள் கூட்டம் உள்ளது, ஜாக்கிரதை” என பதிவிட்டு பதிலடி கொடுத்திருந்தார். நடிகை குஷ்புவின் இந்த பதிவு தற்போது சர்ச்சையாகியுள்ளது. குஷ்புவின் பதிவில் சேரி மொழி என குறிப்பிடப்பட்டிருப்பதே சர்ச்சைக்கு காரணம்.


குஷ்புவின் பதிவில் சேரி மொழி என குறிப்பிடப்பட்டிருப்பதற்கு முன்னாள் பாஜக நிர்வாகியும் நடன இயக்குநருமா காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். குஷ்புவின் டிவீட்டை தனது எக்ஸ் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள காயத்ரி ரகுராம், “இதைச் சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன்.

சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன், என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன், இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவறை உணர்ந்து பதிவை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். ‘சேரி மொழியை’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

From around the web