ஐ.சி.யூ பிரிவில் நடிகர் பாலா... மருத்துவமனைக்கு விரைந்த சிறுத்தை சிவா!?

 
Bala

பிரபல நடிகர் பாலா கல்லீரல் தொடர்பான பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2003-ம் ஆண்டு வெளியான ‘அன்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பாலா. அதனைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவரால் நிலைக்க முடியவில்லை. இதையடுத்து மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய பாலாவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளும் வாய்ப்புகளும் குவிந்தன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்ந நிலையில், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார் பாலா. அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். 2012-ம் ஆண்டு அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். அடுத்து டாக்டர் எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

Bala

இந்த நிலையில், நடிகர் பாலா உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சிகிச்சைக்காக ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆனதாகவும் கூறப்படுகிறது. பாலாவின் மனைவியின் உறவினர்கள் மற்றும் அவரது தாயார் தற்போது அவருடன் மருத்துவமனையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பாலாவின் சகோதரரும் இயக்குனருமான சிவா, இன்று கொச்சிக்கு சென்று, தனது தம்பியை நலம் விசாரிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் பாதுஷா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாலாவைச் சந்தித்தனர். இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மலையாள தயாரிப்பாளர் பாதுஷா, “உன்னி முகுந்தன், நான், விஷ்ணு மோகன், ஸ்வராஜ் மற்றும் விபின் ஆகியோர் நடிகர் பாலாவை இன்று அமிர்தா மருத்துவமனையில் சந்தித்தோம்.

பாலா எல்லோரிடமும் நன்றாக பேசினார். தற்போது அவரது உடல்நிலையில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அவரது சகோதரர் சிவா சென்னையில் இருந்து மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். பாலாவின் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ அறிக்கை பின்னர் மருத்துவர்களால் வெளியிடப்படும்” எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பாலாவுக்கும் உன்னிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web