ரூ.1 கோடிக்கான உத்தரவாதம் செலுத்த வேண்டும்.. சிம்புக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

 
simbu

வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருந்தது.

Vels International

இதனையடுத்து வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சிம்பு ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தை இதற்கு தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களின் இயக்குநர் கோகுல் இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அந்தப் படம் துவங்கப்படவில்லை.

இந்த நிலையில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடுத்திருந்தது. அந்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரிப்பதற்காக திட்டமிட்டபட்டிருந்த கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதாக நடிகர் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்ததாகவும், அந்த படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசனுக்கு முன்பணமாக நான்கரை கோடி ரூபாயை கடந்த 2021-ம் ஆண்டு அளித்ததாகவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிக்கு வரவில்லை என்றும், எனவே, கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

High-Court

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஒப்பந்தத்தில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிம்பு ஒரு கோடி ரூபாய் உத்தரவாதத்தை செலுத்த வேண்டும். செப்டம்பர் 19ல் உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

From around the web