மீண்டும் பொன்னியின் செல்வன்-2 படப்பிடிப்பா? படக்குழு விளக்கம்
பொன்னியின் செல்வன் 2 பாகத்தில் விடுபட்ட சில காட்சிகளுக்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தை எடுத்தபோதே, இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு பாகங்களுமே சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்ததாகவும், அந்த தொகை முழுவதும் முதல் பாகத்திலேயே கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
முதல் பாகம் வசூல் தியேட்டர் வெளியீட்டில் மட்டுமே ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. முதல் பாகத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடிக்கு மேல் விலைபோய் அந்த தொகை லாபமாக வந்துள்ளது என்கின்றனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வசூல் முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள். பொன்னியின் செல்வன் 2 படத்தை அடுத்த வருடம் ஜூன் அல்லது ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 பாகத்தில் விடுபட்ட சில காட்சிகளுக்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் கூறும்போது, “பொன்னியின் செல்வன் படத்துக்கு டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரீக்கார்டிங் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. எடிட்டிங்கும் நடக்கிறது. காட்சிகள் திருப்தியாக இல்லை என்றால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால் அப்படி எந்த காட்சியும் இல்லை. எனவே மீண்டும் படப்பிடிப்பை நடத்துவதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை. எடிட்டிங்கில் ஏதேனும் குறை தெரிந்தால் அப்போது படப்பிடிப்பு நடத்துவதா இல்லையா என்று யோசிப்போம்” என்றனர்.