5 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு... ரசிகர்களுடன் நடிகர் விஜய்!!

 
Vijay

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தோழா, மஹரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு வெளியாக உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

Vijay-Makkal-Iyakam

விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை விஜய் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.


சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொள்ள உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார் என்று வெளியான செய்தியை அறிந்து ரசிகர்கள் பனையூரில் குவிந்துள்ளனர். சேலம், நாமக்கல், மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாதத்திற்கு ஒரு முறையாவது ரசிகர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கம் வட்டாரத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web