குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன் - நடிகை ஹன்சிகா

 
hansika

31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன் என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

‘ஷக்கலக்கா பூம் பூம்’ என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கியவர் ஹன்சிகா மோட்வானி. அதே நேரத்தில் ‘தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத்’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார்.

இதையடுத்து, 2007-ம் ஆண்டு பூரி ஜெகனாத் இயக்கத்தில் வெளியான ‘தேசமுதுரு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘ஆப் கா சரூர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் 2008-ல் வெளியான ‘பிந்தாஸ்’ என்ற கன்னடப் படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்தார். பின்னர், 2011-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ படத்தில் அறிமுகமான இவர், ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த 50வது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Hansika

அண்மைக்காலமாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில், திடீரென தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்த வகையில் தன்னுடைய பிசினஸ் பார்ட்னரும், நீண்ட நாள் நண்பரும், தன்னுடைய தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரை, திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஹன்சிகா புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 4-ம் தேதி இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாழ்ந்த, முன்டோட அரண்மனையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.

Hansika

ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், “பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனது அம்மா சிறுவயதிலேயே எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார். நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்றும் அவர் கூறுவார். அதனால்தான் நான் கதாநாயகி ஆன பிறகு குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டேன். இப்போது 31 குழந்தைகள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

கடவுளின் ஆசி இருப்பதால்தான் என் வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. திருமணமான பிறகு சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றேன். 20-ந் தேதி முதல் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட போகிறேன். கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இரண்டு வெப் தொடர்கள் உள்ளன. எனவே நான் மிகவும் பிசி” என்றார்.

From around the web