முதல் ஆளா ஓடோடி வந்த சிவகார்த்திகேயேன்!
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுள்ளது. திருவண்ணாமலை மண் சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தவிர மற்ற இடங்களில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் வீடுகள், உடைமைகளை இழந்து மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, தற்காலிக உறைவிடம் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் நிவாரணப்பணிகளை கண்காணித்து முடுக்கி விட்டுக் கொண்டிருக்கின்றனர். உடனடி நிவாரணமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டிருந்தார். ஆனால் இது வரையிலும் இதற்கான பதிலோ, பணமோ ஒன்றிய அரசிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில் ஃபெஞ்சல் நிவாரணத் தொகையாக 10 லட்சம் ரூபாயை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “ஃபெஞ்சல் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சகோதரர் சிவகார்த்திகேயன் , ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.” என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.