பாஜகவில் பொறுப்பேற்கும் லதா ரஜினிகாந்த் அக்கா மகள் மதுவந்தி! அப்போ ரஜினி கட்சி ஆரம்பிக்கல்லையா?
நடிகை காயத்ரி ரகுராம் மாநில கலைப்பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து தாவிய முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தூத்துக்குடி சசிகலா புஷ்பாவுக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகைகள் நமீதா, கவுதமி, குட்டி பத்மினி, மதுவந்தி ஆகியோர் தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கவுதமி நீண்டகாலமாக பாஜகவில் இருந்து வருகிறார். துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ஆசி பெற்றவர் என்றும் கூறப்படுவதுண்டு.
ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் அக்கா மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்திக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு அமல்பட்டதிலிருந்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக நாள்தோறும் வீடியோ வெளியிட்டு வந்தார் மதுவந்தி.
அதில் அபத்தத்தின் உச்சமாக, 20 ஆயிரம் கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் பிரதமர் மோடி பணம் டெபாசிட் செய்தார் என்று உளறிக் கொட்டினார் அதற்கு மன்னிப்பு கேட்டதாகச் சொல்லி வெளியிட்ட வீடியோவில் தன்னைத் தானே பெரிய மனுஷி என்று பேசியதற்காகவும் சமூக ஊடகங்களில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.
ரஜினிகாந்தின் குடும்பப் பெண்ணான மதுவந்திக்கு மாநில அளவில் பொறுப்புகளை பாஜக வழங்கியதற்குப் பின்னால் ரஜினி அரசியல் குறித்த மர்மமும் இருப்பதாகத் தெரிகிறது. ரஜினி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பார் என்று நம்ப்பட்ட மதுவந்தி பாஜகவில் செட்டில் ஆவதைப் பார்த்தால் ரஜினிகாந்த கட்சி தொடங்கப் போவதில்லையோ? என்ற கேள்வியும் எழுகிறது!
கொரோனா பேரிடரில் ரஜினி அறிவித்த “எழுச்சி அரசியல்” முடங்கிப் போயுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இன்னும் கொரோனா தமிழ்நாட்டை விட்டுப் போன பாடில்லை.
இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், இனிமேல் கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு ரஜினிகாந்த வந்து விட்டாரோ? என்ற சந்தேகம் பலமாகியுள்ளது! சித்தப்பா கட்சியில் சேர்வதற்கு காத்திருக்காமல், பாஜகவில் ஐக்கியமாகும் மதுவந்தி மறைமுகமாக இந்த செய்தியை சொல்வதாகவே தெரிகிறது.