தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

 

ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில்கொண்டே தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசுகையில்,  “ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில்கொண்டே தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். சிலை செய்யும் ரூ. 3 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிதி ரூ.5 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.