அடேங்கப்பா! ஒரு நாளைக்கு 1.5 லட்சம் ரூபாய்! கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் தான் இது!!
இந்திய அளவில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் உயிரிழப்பு சதவீதம் குறைவாகவே உள்ளது. இது ஆறுதலான தகவல் என்றால், நோயை குணப்படுத்துவதில் தமிழக அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்கள், ஊழியர்களுமே பெரும் பங்காற்றி வருகிறார்கள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவர் தன்னுடைய உயிரையே விலையாகக் கொடுத்துள்ளார்.
ஆனாலும் சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. அப்படி அனுமதி வழங்கப்பட்ட தூத்துக்குடியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு, குறைபாடுகள் காரணமாக அனுமதி ரத்தும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்காக நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வசூலிப்பதாக தொலைக்காட்சி ஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் அம்பலமாகியுள்ளது
செய்தித் தொலைக்காட்சி நடத்திய புலனாய்வில் கிடைத்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். மருத்துவமனையின் பணியாளரிடம் நோயாளியின் உறவினர் என்று கூறி பேசிய தொலைக்காட்சி நிருபர் தகவல் பெற்றுள்ளார். அதன்படி, சென்னையின் குறிப்பிட்ட மருத்துவமனையில் கொரோனா நோயாளியை அனுமதிக்க 3 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் நாளொன்றுக்கு படுக்கை கட்டணமாக 1.5 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் அந்த மருத்துவமனை பணியாளர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு நாளைக்கு மருத்துவ/செவிலியர் பாதுகாப்பு உடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும் எனவும் மருத்துவமனை பணியாளர் அந்த உரையாடலில் தெரிவிக்கிறார். இந்த ஸ்டிங் ஆப்பரேஷன் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுத்து விடுங்கள் என்று போர்டில் எழுதி வீடியோ போட்டு கத்தி கத்திப் பேசிய அந்த “தாஸ்” எங்கேப்பா?