சென்னையில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

 

சென்னையில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்ககடலில் உருவான தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. அதிலும் 6-ந் தேதி நள்ளிரவு முதல் 7-ந் தேதி காலை வரை விடிய விடிய 23 செ.மீ. அதி கனமழை கொட்டி தீர்த்தது.

இதன் தொடர்ச்சியாக கனமழையும் பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கின. அவற்றை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவித்துள்ளார்.