பதவியை எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை - தோப்பு வெங்கடாசலம் அதிரடி!

 

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் அவரின் ஆதரவாளர்கள் 905 பேரும் திமுகவில் இணைந்தார்கள்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், “அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அற்புதமாக வழிநடத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகள் எங்களை ஈர்த்தது.

நேர் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் அவருடைய பாங்கு எங்களை ஈர்த்தது. பதவியேற்றதும் பெண்களுக்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதை அரசியல் ஆர்வலர்கள் உற்று நோக்குகிறார்கள்.

மக்களின் குறைகளைத் தீர்க்கும் நிரந்தர முதல்வராக முதல்வர் மு.க ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். உலக தமிழர்களுடைய ஒப்பற்ற தலைவராக கலைஞரின் வாரிசாக ஸ்டாலின் அவர்கள் சமூக நீதியுடன் செயல்படுகிறார்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு முதல்வசர் செயல்படுகிறார்.

பதவியை எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை. அவருடைய பார்வை ஒன்றே போதும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம்.” எனக் கூறினார்.