உலமாக்களுக்கு உதவித்தொகை; மாவட்ட ஆட்சியர் அழைப்பு..!

 

கல்வி, திருமணம், மகப்பேறு ஈமச்சடங்கு உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல், தர்கா, மதரஸா, முஸ்லிம் அனாதை இல்லம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும், சேலம் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ள 18 முதல் 60 வயதுக்குட்பட்ட உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள், தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் செயல்படும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவு செய்துகொள்ளும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, 10-ம் வகுப்பு முதல் முதுகலை, தொழிற்கல்வி படிப்பு வரை கல்வி உதவித்தொகை, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி செலவு தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு, விபத்து மரண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

நல வாரியத்தில் பதிவு செய்ய, http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 110-ல் விண்ணப்ப படிவத்தை நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.