ஒய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி நல்லம்ம நாயுடு மறைவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.. நேரில் அஞ்சலி

 

ஒய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. சென்னை பெரவள்ளூரில் வசித்து வந்த அவர் உடல் நலக் குறைவால் அவரது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார்.

1997 முதல் 2015-ம் ஆண்டு வரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட இவர், தனது நேர்மையான விசாரணையின் மூலம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சிறைக்கு அனுப்பினார்.

மேலும்,  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

“ஊழல் ஒழிப்பைத் தனது நெஞ்சில் சுமந்து - நேர்மையோடும் துணிச்சலோடும் எவ்வித அச்சுறுத்துலுக்கும் அஞ்சாது நியாயத்தை நிலைநாட்டிய காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அன்னாருக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்தி அவர் குடும்பத்துக்கு எனது ஆறுதலைத் தெரிவித்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.