மெரினாவில் தடையை மீறி குவியும் மக்கள்..! கொரோனா பரவும் அபாயம்

 

சென்னை மெரினா கடற்கரைப் பகுதிகளில் தடையை மீறி பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதித்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான தனித்தப் பாதையில் மட்டுமே அனுமதி என்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில், மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு செவிசாய்க்காமல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு நின்ற போலீசார், தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள், பார்வையாளர்களுக்கு  கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஒரு சில பகுதியில் தடையை மீறி மெரினா கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் குவந்ததால் போலீசார் அங்கு சென்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.  நடைபயிற்சி செல்பவர்களுக்கு மட்டுமே கடற்கரைகளில் அனுமதிக்கப்பட்டனர்.