உங்களுக்காகத் தான் ஊரடங்கு – அமைச்சர் விஜய பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்!
வீடியோ மூலம் பேசி ட்விட்டரில் வெளியிட்டுள்ள விஜயபாஸ்கர், ஒவ்வொரு 15 நாட்களிலும் கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளது. மேலை நாடுகளில் முதல் நான்கு “15 நாட்கள்” கட்டத்தில் 5, 10, 20 என்று இருந்த எண்ணிக்கை 5வது “15 நாட்கள்” கட்டத்தில் ஆயிரக்கணக்கில், லட்சத்தில் தொட்டது.
நம்முடைய முதலமைச்சர் விமானநிலையம், ரயில் நிலையம், பஸ் போக்குவரத்து, மாநில எல்லைத் தடுப்பு என அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து மாநில அளவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
மருத்துவர்களும், செவிலியர்களும், அரசு ஊழியர்களும் குடும்பத்தை விட்டு, நாள் தோறும் நீண்ட நேரப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது தான் எல்லோருடைய இலக்கு. கொரோனா தொற்று பரவுவதை தடுத்து, நமது மாநிலத்திற்கு, நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுப்போம்.
குடும்பத்தினரோடு நேரத்தை செலவழித்து, வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்து, ஆரோக்கியமான சத்தான உணவை சாப்பிட்டு ஓய்வெடுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்,” என்று உருக்கமான கோரிக்கை வெளியிட்டுள்ளார்.