தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த மாதம் 27 மற்றும் 30ஆம் தேதி என 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சித் தலைவர், கிரம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 தேர்தல்களும், ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவருக்கான வாக்குச் சீட்டு இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வாக்குச் சீட்டு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச் சீட்டு மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
ஊரக உள்ளாட்சிகளில் நடைபெறும் நேரடித் தேர்தல்களில் தேர்வான மக்கள் பிரதிநிதிகள் மூலம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பணியிடங்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பணியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.