மக்கள் மீது அக்கறை இருந்தால் கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு மளிகைப்பொருட்கள் வீடுகளுக்கே சென்று வாகனங்களின் மூலம் விநியோகிக்கும் திட்டத்தை பட்டாளம் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரம் தளர்வுகள் இல்லாத முழு உரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மொதுமக்கள் நலன் கருதி முதல்வரின் வழிகாட்டுதலின் படி இன்று முதல் நடமாடும் மளிகைக் கடைகள் செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் நடமாடும் மளிகைக் கடைகள் சேவையை விரைவில் தொடங்க உள்ளோம். தமிழகம் முழுவதும் நடமாடும் கடைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு கசப்பான மருந்தாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதற்காகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி தொடர்பாக குற்றச்சாட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி பெற்று தரும் பணியை எல்.முருகன் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை. மொத்தம் 96 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.

சென்னைக்கு அடுத்து கோவையில் தான் அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வானதி சீனிவாசனுக்கு கோவை மக்கள் மீது அக்கறை இருந்தால் கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மிக விரைவில் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.